பேப்பர் படிக்கத் தெரியுமா?
பேப்பர் அதாவது நாளிதழ் படிக்கத் தெரியுமா? என்ற கேள்வி உங்களுக்கு வாசிக்கத் தெரியுமா என்ற அர்த்தத்தில் அல்ல. பேப்பரை படிக்கத் தெரியுமா? என்பது ஒரு சுலமான கேள்வி அல்ல இதற்கு பதில் தெரியும் என்பவர்களிடம் ஒரு நாளிதழைக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள் நன்றாக அட்சர சுத்தமாக படிப்பார்கள், ஆனால் படித்து முடித்தவுடன் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் கேள்வி.
நாளிதழ் படிப்பது ஒரு கலை. படிப்பதைவிட படித்ததும் அதை மடித்து வைப்பது படிப்பதைவிட ஒரு பெரிய கலை. நாளிதழை படித்தபின்பு அதன்; மடிப்பை துளிகூட பிசகாமல் மடித்து வைப்பது ஒரு தவம் மாதிரி செய்பவர்கள் நாளிதழ் காதலர்கள் என்றுகூடக் கூறலாம். அவர்கள் மடித்து வைத்த நாளிதழை எடுத்துப் பார்த்தால் புதிய நாளிதழ் மாதிரி யாரும் இன்னும் அந்தப் பேப்பரை பிரித்து படிக்கவில்லை என்று தோன்றுமாறு இருக்கும்.
ஒரு சமயம் எனது நண்பருடன் ஒரு பெரியவரைப் பார்க்கப் போயிருந்தேன் அவர் வர தாமதம் ஆனதால் வரவேற்பறையிலிருந்த அன்றைய நாளிதழை எடுத்து படித்துக் கொண்டிருந்தேன். நண்பர் அங்கிருந்த ஒரு வார இதழை எடுத்து படித்தார். செய்திகளை வாசிப்பதில் ஆழ்ந்திருந்ததில் நான் சந்திக்கப்போன பெரியவர் அங்கு வந்ததையோ என் எதிரில் அவர் அமர்ந்ததையே கவனிக்கவில்லை. திடிரென நாளிதழை மடித்து வைக்கும் போதுதான் அவரை கவனித்தேன். மன்னிப்பு கோரியவாறே நானும் எனது நண்பரும் எழுந்து நின்றோம். நான் நாளிதழை மடித்து அது ஏற்கனவேயிருந்த இடத்தில் வைத்தேன். எங்களை உட்காரச் சொன்னப் பெரியவர் நான் வைத்த நாளிதழை எடுத்து பார்த்துவிட்டு 'எப்பவுமே இப்படித்தான் மடித்து வைப்பீர்களா? இல்லை இங்கே மட்டும் இப்படி மடித்தீர்களா? என்று கேட்டவுடன் எனக்கு ஒரே திகைப்பு 'இல்ல சார் பேப்பரை படிச்சுட்டு அதன் மடிப்பிலேயே மடித்து வைப்பதுதான் எனது வழக்கம் என்றேன்' 'வெரிகுட்' என்று சொல்லிவிட்டு நான் வந்த காரணத்தைக் கேட்டு செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து ஒரு அரை மணிநேரம் பேசிவிட்டு திரும்பினோம்.
வெளியே வந்தவுடன் எனது நண்பர் என்னிடம் சொன்ன செய்தி என்ன தெரியுமா? ஒரு முறை எனது நண்பர் தனது நண்பருக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்று இந்தப் பெரியவரைப் பார்க்கப் போயிருந்த போது உடன் வந்த ஒரு நண்பர் பேப்பரை படித்துவிட்டு சரியாக மடிக்காமல் வைத்ததை பார்த்த இந்தப் பெரியவர் இவர்கள் எதற்காக வந்தார்கள் என்றுகூட கேட்காமல் ஒரு பேப்பரை சரியாக மடிக்கத் தெரியாதவர்களுக்கு நான் உதவ முடியாது என திரும்பி அனுப்பிவிட்டதாக தெரிவித்தார். அவரது குணம் தெரியாமலேயே எனது வழக்கமான செயலாக நான் நாளிதழை மடித்தது எனக்கு சாதகமாக இருந்துள்ளது. அந்தப் பெரியவரைப் போல நாளிதழை காதலிப்பவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சுமார் 20 வருடங்களுக்கு எங்கள் ஊரிலுள்ள ஒரு அரசு நூலகத்தில் வாசகனாக இருந்த சமயம் அங்குள்ள நூலகரை நான் கவனித்த போது அவரது நாளிதழ் மற்றும் புத்தகங்கள் மீது அவர் வைத்துள்ள பாசத்தை நேரிலேயே கண்டு வியந்துள்ளேன். நூலகத்தில் உள்ள வார இதழ்கள் அல்லது புத்தகங்களை படிப்பவர்கள் மறுமுறை வந்து படிப்பதற்காகவோ அல்லது பழக்கத்தினாலேயோ மூலையை மடித்து வைப்பார்கள். தினமும் அந்த நூலகர் மூலை மடித்ததாக தெரியும் புத்தகங்களை எடுத்து அந்தப் பக்கத்தை திறந்து அந்த மடிப்பை எடுத்து அந்தப் பக்கத்தை அவர் நீவி விடுவதை நான் வெகுவாக ரசிப்பேன். அப்போது அவர் முகத்தில் ஒரு இனம்புரியாத வெளிச்சம் தோன்றுவதாக எனக்குத் தோன்றியது. முதல் நாள் கிழந்த வார இதழ் மறுநாள் பார்க்கும்போது கிழிசல் ஒட்டப்பட்டு கசங்கல்கள் இல்லாமல் புதிதாக இருக்குமளவிற்கு சரிசெய்து வைத்து விடுவார் அந்த நூலகர்.
நூலகத்தில் யாராவது வாசகர்கள் நாளிதழை சரியாக மடிக்காமல் வைத்து சென்றால் இவர் அந்த நாளிதழை மடிப்பு கலையாமல் மடித்து வைப்பதும் மீண்டும் மற்றொரு வாசகர் அந்த நாளிதழை பிரித்து சரியாக மடிக்காமல் வைத்துச் செல்ல இவர் திரும்பவும் அதனை மடித்து வைக்க பல தடவை இதுபோல அவர் செய்வதை பார்த்திருக்கின்றேன். அவரிடம் நான் 'ஒவ்வொரு தடவையும் மடித்து வைப்பதற்கு பதில் ஒரேயடியாக நூலகத்தை பூட்டும் போது மடித்து வைத்துக் கொள்ளலாமே' என்றதற்கு அவர் 'சரியாக மடிக்காத நாளிதழைப் பார்க்க எனக்கு சங்கடமாக இருக்கிறது அதனால்தான் ஒவ்வொரு முறையும் மடித்து வைக்கிறேன். நான் மடிப்பதை பார்த்து யாராவது இதனை மடித்து வைப்பார்களா என்று பார்க்கிறேன் இதுவரை யாரும் அப்படி செய்யவதில்லை' என்று வருத்தத்தோடு அவர் சொன்ன போது ஒரு குழந்தையைப் போலத்தான் இவர் நாளிதழைப் பார்க்கிறார் என்று எனக்குத் தோன்றியது. நான் நாளிதழை மடிப்பு கலையாமல் இப்பவும் மடித்து வைப்பதற்கு காரணம் அந்த நூலகர்தான். சில நேரங்களில் நான் நாளிதழை சரியாக மடிக்காமல் வைக்கும் போது முகம் மறந்து போன அந்த நூலகர் விரக்தியில் 'யாரும் அப்படி செய்யவதில்லை' என்ற குரல் இன்னமும் என் காதில் ஒலிக்கிறது.
சாதாரணமாக பேன் ஓடும் காற்றிலேயே நாளிதழைப் படிப்பது சிரமம். பேருந்து பயணத்தின் போது ஜன்னலில் வரும் காற்றைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் அந்த காற்றையும்; மீறி சிலர் நாளிதழை காலுக்கு கீழ் வைத்து மடக்கி அது ஒரு பக்கம் இழுக்க இவர் ஒரு பக்கம் மடிக்க கடைசியில் ஒரு குழந்தையின் கையில் கிடைத்த பேப்பரைப் போல கசங்கிய அந்த நாளிதழைப் பார்க்கும் போது எனக்கு வரும் கோபத்திற்கு அளவே இருக்காது. அதனைப் பார்க்கப் பிடிக்காமல் மறுபக்கம் திரும்பிக் கொள்வேன். பச்சையாக சொன்னால் நாளிதழை பேருந்தின் காற்றின் வேகத்திற்கு மீறி படிக்க நினைப்பவர்களைப் பார்த்தால் அந்தக் கால திரைப்படங்களில் நம்பியார் போன்ற வில்லன்கள் பெண்களை கற்பழிப்பது போலத் தோன்றும். பேருந்து பயணத்தில் அதுவும் காலைப்பயணத்தில் இது போன்று நிறைய வில்லன்களைக் காணலாம்.
நண்பர்களின் வீட்டிற்கோ அல்லது உறவினர் வீடுகளுக்கோ செல்லும் போது அங்கு படிக்கப்பட்ட நாளிதழ்களை மிகவும் மோசமாக ஒரு பழைய பேப்பர் கடையில் உள்ளதைப் போல அடுக்கி வைத்திருப்பதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கும். நாமே கொஞ்ச நேரம் ஒதுக்கி அவற்றை அடுக்கி வைத்துவிடலாமா என்றுகூட தோன்றியதுண்டு. அடுத்த வீட்டில் அதிகப்பிரசங்கித்தனம் வேண்டாம் என்று அமைதியாக வந்துவிடுவதுண்டு. ஆனால் சில வீடுகளில் நாளிதழ்களை அழகாக அடுக்கி வைத்திருப்பதை பார்த்து இதனை செய்தது யார் என்று கேட்டு அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் எனது சந்தோஷத்தையும் தெரிவிப்பதுமுண்டு.
குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களை குழந்தைகள் வளர்ந்த பின்பு தனியாக விட்டுவிட்டு அவர்கள் மட்டும் சொகுசு வாழ்க்கையை தேடிப் போவதைப் போல நாளிதழ்கள் சுடச்சுட செய்திகளை தரும்போது ஆவலுடன் படித்துவிட்டு காரியம் முடிந்தது அதனை அம்போ என்று விடுவது நமக்கு வழக்கமாகிவிட்டது. அதற்காக நாளிதழுக்கு ராஜ வாழ்க்கை கொடுக்கச் சொல்லவில்லை இறுதியில் நாளிதழ்கள் கடைக்கு எடைக்குத்தான் செல்கிறது என்றாலும் அது எடைக்குச் செல்லும்வரை அதற்கான உரிய இடத்தை அளிக்காலாமே?
கல்வி கற்பித்த ஆசானுக்கே உரிய மரியாதையை இந்த உலகம் தராதபோது படித்ததும் தூக்கி எறியும் பேப்பருக்கு எதற்கு இத்தனை புலம்பல் என்றால் சிலருக்கு சிலவற்றின் மீது இருக்கும் காதல் அலாதியானது. தனது பழைய வெஸ்பா ஸ்கூட்டரை அதிகாலையில் அதன் பாலீஸ் போகுமளவிற்கு துடைத்து அதனை தினமும் ரசனையோடு பார்க்கும் எனது நண்பருக்கு அந்த வெஸ்பாவின் மீது காதல். படிக்கவே நேரமில்லாத போதும் புத்தக கண்காட்சி என்றவுடன் தனக்கு பிடித்த புத்தகங்களை எல்லாம் அள்ளிக் கொண்டு வந்து அடுக்கி வைத்து அதனை ரசிக்கும் மனிதர்களும் உண்டு அவர்களுக்கு புத்தகங்களின் மீது காதல். இதைப்போலத்தான் அந்தப் பெரியவர் அந்த நூலகர் ஆகியோருக்கு நாளிதழ்களின் மீது காதல். இவரைப் போன்றவர்கள் நாளிதழுக்கு கொடுக்கும் மரியாதை அளவிற்கு நாம் அவற்றிற்கு கொடுக்காவிட்டாலும் இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பதால் செய்தி வரலாறாக மாறும் வரைக்காவது மரியாதை நாளிதழுக்கு அளிக்கலாமே?